புதுக்கோட்டை , மே 29: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள முத்துப்பட்டினத்தில் முத்துகாமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா தேரோட்டம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டும் வைகாசி திருவிழா தேரோட்டம் கடந்த 20ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் இரவு பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்றது.
மேலும் மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அலங்கரிக்கப்பட்ட முத்துகாமாட்சியை அம்மனை எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவில் பாரம்பரிய வழக்கப்படி சாமியாடிகள் பக்தர்களுக்கு குறி சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது.
தேர் முக்கிய வீதிகளின் வழியாக வந்து நிலையை அடைந்தது. இதில் தொழிலதிபர் ராமச்சந்திரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் முத்துகாமாட்சி அம்மன் கோவில் வைகாசி திருவிழா நிறைவுபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை முத்துப்பட்டினம், பாழையூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.